Thursday 12 December 2013

என்னையும் கூட உலகம் முழுவதும் கொண்டு செல்லும் டிஸ்கவரி

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே -சிவவாக்கியர்

இப்படி திக்குத் தெரியாத காட்டில் திசை புரியாமல் பயணித்து உந்தி தள்ளிய கேள்விகள் இருந்த சுவடுகள் அழிந்து போய் அருள்வழியால் ஆட்கொள்ளப்பட்டு இதோ இன்று நானே நானாக ,

வாழ்க்கையின் சாதனை வாழ்வதே என்பதாய் நன்றியோடு கூடிய ஆனந்தமாய் அமைதியாய் குருவருளோடும் அன்பர்களின் ஆசீர்வாதங்களோடும் என் வழியில் நான் பயணித்துக் கொண்டு,,,,,,,

என்னோடு நான் இருந்த நொடிகள் சுகமானவை . என்னோடு நான் இருக்கும் ஷணங்கள் ஆனந்தமானதாகவே உள்ளது ,

என் குருநாதரோடு கழித்த ஷணங்களை விவரிக்க வார்த்தைகள் இன்னும் யாரும் கண்டுபிடிக்க வில்லை , அது மட்டுமே முழுமையானதாய் இருக்கின்றது என்றுதான் அதிக பட்சம் சொல்ல முடியும் என்னால்.

வாழ்க்கையின் ஒரு பாதி நான் இங்கு வசிப்பேன் வாழ்க்கையின் மறுபாதி நான் அதை ரசிப்பேன் என்று வைரமுத்து எழுதியிருப்பார், அது அவருக்கு வாய்த்திருக்கிறதோ இல்லையோ எனக்கு ஆனந்தமாக ஆசீர்வாதமாக அழகாக வாய்த்திருக்கிறது என்பது வரமே

பொதுவாக எத்தகைய அனுபவமானாலும் சரி அது எனக்கு ஏற்பட்டதாக இருப்பின் அதற்கு நான்  எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை,  ஆனால் அதையே பிறர் கூற கேட்கும் போது அந்த அனுபவங்களை விட அந்த மனிதருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியாகி விட நினைப்பது உண்டு. 

ஒன்றை சரியென்றும் தவறென்றும் சொல்லிட நமக்கு என்ன உரிமை உள்ளது என்பதே காரணம். எது எப்படியானாலும் சில அனுபவங்கள் மறக்க முடியாதவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை , நாம் நினைக்க தவறினாலும் அது நினைவில் நின்று கொண்டே இருக்கும். அப்படித்தான் கேதார்

 நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ --- சிவவாக்கியர்

கேதார் என்றவுடன் 96ம் வருடம் விஜி அக்கா மற்றும் சத்குருவோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டது முதலில் நினைவிற்கு வரும், அதன் பின்னர் நாங்கள் எழுவர் 2001ல் வந்த தரிசித்து பின் வாழ்வில் முதல் முதலில் பிக்க்ஷாதிகாரம் பெற்றது, அடுத்து பரிவரார்ஜகா காலத்தில் நடைபயணமாக திருவடி அடைந்தது என நினைவுகள் சுழன்றோடும்,

நான் 2003ம் ஆண்டு பரிவார்ஜகா வாழ்க்கையில் பயணித்து திரும்பிய பின் பலரும் என்னுடைய அனுபவங்களை தெரிந்து கொள்ள விரும்பினார்கள். இப்படி இருக்குமா? அப்படி நடக்குமா ? என்றெல்லாம் கேட்பார்கள், இன்றும் ஒரு சில அன்புள்ளங்கள் அனுபவக் கட்டுரை எழுத சொல்லிக் கொண்டுதான் உள்ளனர், ஒருவர் புத்தகமாக கூட வெளியிட முன்வந்துள்ளார். ஆனால் ஏனோ அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை இன்னமும். இறையருளுக்கு விட்டு விட்டு அமைதியாக கவனித்து கடந்து செல்கிறேன்,

இதற்கு காரணம் இரண்டு உள்ளது. இப்படி நமது ஆன்மீக அனுபவங்களை பகிர்வது கூட ஒரு வகையில் அறியாமையே . ஆன்மீகத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை, ஆனால் அனுபவங்கள் என்பது நாம் ஒரு நூலை மூலத்தில் இருந்து மொழி பெயர்ப்பது போலத்தான். மொழி பெயர்ப்பு எவ்வளவு அழகாகவே அமைய நேரிட்டாலும் மூலத்தின் அழகும் நடையும் வரவே வராது , அதை அனுவித்தவருக்குத்தான் புரியும்,

அடுத்து இதில் உள்ள சிக்கல் இத்தகைய அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்பவருக்கும் , அதை பகிர்ந்து கொள்பவருக்கும் உள்ள சிக்கல்கள்,
முதலில் நமது அனுபவங்களை ஆர்வமாக கேட்பவர்கள் நம்மை ஏதோ அவதார புருஷர்கள் போல எண்ணி ஆராதிக்க ஆரம்பிப்பார்கள் , நாமும் கடந்து போன அந்த பழைய நொடிகளையே பேசி வாழ்ந்திருப்போம். பெரும்பாலனவர்கள் அதிலேயே சிக்கி போய்விடுவார்கள், இதுதான் மனதின் இயல்பு, ஏனெனில் கடந்த காலம் என்கிற ஒன்று இல்லையெனில் மனதால் செயல்பட முடியாது,

எப்போதுமே அது இந்த ஷணத்தில் இருப்பதில்லை, ஒன்று கடந்த காலத்தை அசை போடுகிறது அல்லது எதிர்காலத்திற்கு கனவு காண்கிறது. ஆனால் வாழ்வோ இந்த ஷணத்தில் , நிகழ்காலத்திலேயே நடக்கிறது,

நாம் அனைவரும் கிரிகெட் விளையாட்டை மிகவும் ரசிக்கின்றோம். நமக்கு டென்டுல்கரோ அல்லது டிராவிட்டோ அவர்கள் விளையாடும் போது அவர்களுடைய கடந்த காலம் மூழுவதும் டிவியில் காட்டப்படுகிறது அல்லது சொல்லப்படுகிறது. ஆனால் எண்ணிப்பாருங்கள் அவர் நான் இவ்வளவு பெரிய விளையாட்டு வீரன் என்கிற ரீதியில் அடுத்த பந்தை சந்திக்க இயலுமா?  எவ்வளவு பெரிய மூட்டாள்தனம்,

ஒரே வேகத்தில் வீசப்பட்டாலும் ஒரே பௌலராலேயே வீசப்பட்டாலும் எவ்வளவு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது, அது எத்தனை வாய்ப்புக்களை தன்னுள் உள்ளடக்கிக் கொண்டு வருகிறது ,

எப்படி ஒரு நொடியும் , நதியும் மீண்டும் தான் கடந்த பாதையை மீண்டும் கடப்பதில்லையோ அப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு ஆன்மீகப் பயணமும் கூட……………………….

அடுத்து கேட்பவருக்கும் தனக்கும் இப்படி யெல்லாம் நடக்காதா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது , அதற்கு காரணம் மனதின் ஒப்பிட்டு பார்க்கும் தன்மைதான் என்பதை சொல்லவேண்டியது இல்லை, பெரும்பாலோர்க்கு இந்த எதிர்ப்பார்ப்பே  அவரது ஆன்மீக சாதனைகளுக்கும் , முன்னேற்றத்திற்கும் தடையாகிவிடுகிறது,

எப்படி நாம் காதால் கேட்கும் சப்தங்களையும் கண்ணால் பார்க்கும் பொருட்களையும்  ஒன்றோடு ஒன்று தொடர்ப்பு படுத்தி இரவு தூக்கத்தில் கனவுகளாய் மனம் தருகிறதோ அதுபோல தியானத்திற்கு அமரும் போதெல்லாம் ஒரு சிறு உணர்வு ஏற்பட்டவுடனே அடுத்து இதுவா , அதுவா என்று எண்ணங்கள் மேலெழும்பி கவனத்தை சிதற அடிக்கும், 

மனம் ஒரு விந்தையான கருவி, அழகானதும் கூட, சேகரிப்பதும் சேகரித்ததில் இருந்து செயல்படவும் மட்டும்தான் அதற்கு தெரியும். இத்தகைய விஷயங்கள் தனக்கும் நிகழ்ந்ததைப் போலவே , நிகழ்வதைப் போலவே ஒரு பிரமையையும் ஏற்படுத்திவிடுகிறது ,

ஒரு அனுபவத்தை எழுத்தில் கொண்டு வருவது ஒரு அற்புதமான கலை. அதை கையாளுவதில்  பலரை அதிகம் ரசித்திருக்கிறேன். ஒரு கதாசரியனும் கவிஞனும் மனிதனின் அற்புதமான பரிமாணங்கள் .. 

அனுபவத்திற்குள் செல்லாமலே அனுபவத்திற்குள் பயணிக்க முடியும். உணர்வுகளை கையாளமுடியும். அதே விஷயங்களை அனுபவத்தோடு கலந்து சொல்லும் போது அது அழகான பரிமாற்றம்.

இதன் தாக்கமும் ஆழமும் அளவிடமுடியாது. பஞ்சின் பக்கத்தில் நெருப்பை கொண்டு போவது போல, வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறமையும் மொழியின் மீது ஆளுமையும் வந்து விட்டால் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதுவும் ஆன்மீக அனுபவங்களை எழுதும் போது பலரும் பலவிதமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு. சரியான வார்த்தைகளை கையாளாவிட்டால் அவ்வளவுதான். இதை கையாளுவதில் எனக்கு தெரிந்த வரை என்னை அதிகம் ஈர்த்தவர் திரு பாலகுமாரன் மட்டும்தான்.. ஆகையால் எனது முயற்சியை ரசனையின் எல்லையோடு பெரும்பாலும் நிறுத்திக் கொள்கிறேன்.

அது மட்டுமே எனக்கு தேவையானது. அவரின் எழுத்துக்களை  ரசித்தாலும் கூட அவரது கருத்துக்களில் அவ்வப்போது எனக்குள் முரண்படுவதும் நிகழும். அதுதான் எழுத்தின் பரிமாணம். ஒரு எழுத்து பல பரிமாணங்களை காட்டக் கூடியது. ஒவ்வொரு சமயம் படிக்கும் போதும் ஒவ்வொரு ஆழத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியது. முரண்பாடுகளை ரசிப்பதே வாழ்க்கையின் அழகு. அங்கு போராட்டம் என்பதே இல்லை. அது அது அதனதன் பரிமாணத்தில் அது அதுவாகவே உள்ளது . அதை மட்டுமே ரசிக்கிறேன்.

பெரும்பாலானவர்களால் எழுத்துக்களை தாண்டி பார்க்க முடியாத முடியாமல் போகிறதால் எழுத்துக்களோடும் , வார்த்தைகளோடும் வாழ்நாள் மூழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். அது முடியாத போது எழுதுபவனோடு போராடுகிறார்கள் என்பதே எக்காலத்திலும் நிகழ்கிறது, எழுத்தை அதன் முரண்பாடுகளை நேசிக்க கற்றுக் கொள்ளுபவன் எழுதுபவனையும் அவனது வேறுபாடுகளை கடந்து நேசிக்க கற்றுக் கொள்கிறான்.

இப்படி அனுபவங்கள் முதலில் ஊக்குவிக்கும் கருவியாக உந்து சக்தியாக செயல்பட்டாலும் சில தருணங்களில் அதுவே அடுத்த நிலைக்கு கடந்து செல்ல தடையாகவும் ஆகிவிடுகிறது.

இப்படிப்பட்ட காரணங்கள் எல்லாவற்றையும் விட , இப்பயணத்தில் அனைத்து விதமான முரண்பாடான சூழ்நிலைகளிலும் இருந்துள்ளேன். ஆகையால் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமாக அலங்கரிக்கப்பட்டு அலங்கோலமாக ஆனால் அழகாக ஜோடிக்கப்பட்டிருந்தது,அவையவை அந்தந்த பரிமாணத்தில் அதற்கான பார்வையில் அழகாகவே இருந்தன ,

பஞ்சு மெத்தையிலும் படுத்து உறங்கியுள்ளேன் பாதையின் ஓரத்திலும் உறங்கியுள்ளேன் . ஒரு நாளில் பலமுறை உண்டும் உள்ளேன் வாரக்கணக்கில் ஒரு டீயில் வாழ்ந்தும் உள்ளேன் ,

இப்படி பல பல நினைவுகள் பல பல நொடிகளோடு கைகோர்த்து கண் திறந்திருக்கும் போதே கனவாய் எழும்பி சுழன்றியடித்தாலும் பார்வை மட்டும் இந்த ஷண்த்தில் இருக்க விழிப்பை வேண்டியிருக்கேன் .

கேதார் காலடியில் கடந்த ஒன்னறை வருடம் ஏதோ ஒன்னறை நொடிகளைப் போல நீண்டு சுருங்கி கடந்துள்ளது, எனது மனக்கணக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் இன்னும் இவ்வளவு நாள்தான் என்கிற போக்கில் வாழத் தொடங்கியிருந்தேன்

ஆனால் அப்போதுதான் அந்த பிரளயம் நிகழ்ந்தது , பலரின் கடைசி ஓலங்கள் ஓம்காரமாகவே ஒலித்தன என்றால் சற்றும் மிகையில்லை. வாழ்விற்கும் சாவிற்கும் என எதற்கானாலும் சரி இறைவனை இறைஞ்சுவதை தவிர வேறு வாய்ப்பை யவருக்கும் அந்த நொடி தன்னகத்தே வழங்கவில்லை,

இறைநாமத்தால் உயிர் தப்பியவர்களைப் விட  இறைநாமத்தோடே அவன் திருவடி அடைந்தவர்களே பெருமளவு அதிகம் என்பேன், மந்தாகினியின் சீற்றம் என்று சொல்ல முடியவில்லை , நதி அது தன் போக்கில் போய்கொண்டிருக்கிறது காலத்தின் நொடிகளைப் போலவே ,,,,,,,,,,,,,,,

ஆனால் அது தன் பயணத்தை மாற்றி இருந்தது . ஒரு புதிய பாதையில் எவ்வளவு ஆனந்தமாக ஆக்ரோஷமாக ஓடிவருமோ அப்படித்தான் அது பிரவாகமெடுத்தது, அதுவும் எம்பெருமான் ஈசனாரின் பாதம் தொட முடியும் என்றால் அதற்குத்தான் ஆசை இருக்காதா என்ன ? எத்தனை காலம் காத்திருந்ததோ என்னவோ ?

அன்றைய நாட்களில் இன்றைய குக்கிராமத்தைப் போலவே இருந்த நாமக்கல்லில் பிறந்து வளர்ந்து , தப்பும் தவறுமாய் படித்து வாழ்க்கை பயணத்தின் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த போது நம் குடும்பத்தில் நீதானப்பா மூதல் ஆள் என்பது எல்லாவற்றிலும் பொருந்தியே இருந்தது,

தமிழே தடுமாற்றம் என்கிற நிலை கடந்து , ஆங்கிலம் அறை குறைதான் என்பதையும் கடந்து , முயற்சியுடையோர் இகழ்ச்சி யடையோர் என்பதையே பக்கபலமாய் கொண்டு தமிழ் அறியாத மக்களிடம் பேச முயன்று தோற்று , பின் திக்கு வாய் அவதாரமாய் தப்பும் தவறுமாய் இலக்கணமின்றி பேசி , இன்று ஒரளவு பேச கற்று இருக்கிறன் என்பதை என் ஆரம்ப கால நட்புக்களும் சொந்தகளுமே அறிவார்கள்,

சீசரை சொல்லிக் கொடுத்த சுப்பு பெரியப்பாவும் ஆங்கில நாவல்களை படிக்க வாய்ப்பு தந்த நடராஜ் சித்தப்பாவும் முன்னோடிகள் என்றே நான் கூறுவேன், அதன் பின் சுவாமி நிசர்கா , ஹோடா அம்மா , டக் ஆகியோர் பெரும்பங்காற்றினார் என்பேன்,

இப்படியாக என்னோடு வளர்ந்த ஆங்கிலம் இன்று இந்த உத்தரகாண்டில் எனக்கு பிரதான மொழியாகவே உள்ளது . நான் வியந்த பார்த்த மனிதர்களைப் போல என்னை வியந்து பார்க்கும் குழந்தைகளின் நண்பனாகவே மாறிவிட்டேன் நான்.

என் பூமி பரந்து விரிந்து அழகானது . மொழிகள் கடந்த பரிபாஷை விழிகளை விரித்தே பார்க்க வைத்திருக்கிறது. மலை முகடுகளில் முட்டிக் கொள்ளும் காற்றைப் போலவே எங்களது மொழிகள் முட்டி மோதி மௌனத்தில் சங்கமித்து பின் பிரவாகமெடுக்கும்.

தப்பும் தவறுமாய் எங்களது இருவரின் மொழிகளும் இருந்தாலும் தவறாது ஆனந்தத்தையும் அன்பையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள தவறுவதில்லை. அப்படிப்பட்ட உலகில் மொழிகள் அனைத்தும் வெற்று சப்தமாகி பின் அதையும் கடந்து வெறுமையாகிப் போன நொடிகளில் வெறுமனே சுமார் 36 மணிநேரம் வாழ்ந்திருந்தேன்,

ஏன் எதையுமே தேடிப்பார்க்க கூட தோன்றவில்லை என்பதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது , எவரையும் தேடக் கூட இல்லை, என்னைப் போலவே அனைவரும் ஆங்காங்கு பத்திரமாகி இருப்பார்கள் என்றே அடுத்த நாள் காலை வரை நினைத்திருந்தேன் .

நிச்சயம் இனி மழையும் வராது தண்ணீரும் வராது என்று உணர்வு ஏற்பட்ட பிறகே அந்த மயான பூமியில் நடமாட்டம் துவங்க ஆரம்பித்தது . இதோ 6 மாதங்கள் கடந்து விட்டன , இன்னமும் என் மனம் பலரையும் தேடிக் கொண்டுதான் உள்ளது , என்றுமே இனி காண முடியாது என்று உணர்ந்தாலும் என்றாவது ஒரு நாள் இவர்களை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை சற்றும் குறையவில்லை,

என்னைப் போலவே நம்பிக்கை கொண்ட மனிதர்கள் நிறைய நிறைய . தினமும் ஒன்றிரண்டு நோட்டிஸ்கள் வந்து கொண்டுதான் உள்ளன. இதை யாராலும் தகர்க்கவே முடியாது என்றே தோன்றுகிறது. ரீடர்ஸ் டைஜிஸ்ட் கதைகளில் வருவது போல இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள் என்று சில கதைகள் வரும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு நாளும் உணவருந்தும் போது நந்துவின் முகம் ஞாபகத்தோடு தவறாமல் வருகிறது. ஹன்ஸா புலித்தோலை போர்த்திய சிவனை பற்றி கூறினால் அறைவிநாடிக்கும் குறைவான நேரத்தில் அங்கிருந்த சாதுவின் முகம் வந்து அப்பிக் கொள்கிறது ,

எண்ணற்ற முகங்கள் கலந்து என் முகமாய். எண்ணற்றவர்களின் உடலும் உயிரும் எனக்குள் பாகமாய் . எங்கு செல்வது எப்படி வாழ்வது என்று எதுவும் யோசிக்க கூட உணர்வில்லாத ஒரு நிலை. அடுத்த நொடி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத ஷணத்தில் சுற்றி நடப்பவைகளின் தாக்கத்தால் தீயாய் பற்றி எரிந்த கணங்கள் ,

பிரளயதை விட , மரணத்தை விட மீட்பு பணிகளின் போது கண்ணில் கண்ட காட்சிகளால் கொதித்துப் போயிருந்த என் உள்ளம் ஒவ்வொரு டீவியாய் தேடியது . என் கோபம் அவர்களால் உணரப்பட்டிருக்க வேண்டும். உணரப்பட்டிருந்தது என்றே சொல்வேன். என்னை ஏதோ ஒரு எதிர் கட்சி உறுப்பினராகவே அத்தனை டீவி காமெராக்களும் கண்டன. ஆனால் அவர்களுக்கு தேவை அவர்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும அடுத்தவர்களின் பரிதாப கூக்குரல்கள் மட்டுமே.

அந்த நேரத்தில்தான் ஞான ஆலயம் இதழின் ஆசிரியர் மஞ்சுளா ரமேஷ் எனது பேஸ்புக்கில் ஒரு செய்தி அனுப்பி இருந்தார். அவரை முன்பே அறிந்திருந்தாலும் பழக்கமில்லை. அவருக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாது . ஆனால் அவரது தொடர்ப்புகள் நான் நன்கு அறிவேன். அவர்கள் மூலமாகத்தான் அவர் என்னை கண்டு பிடித்திருக்க வேண்டும்.

அவருக்கும் எனது அனுபவம் தனது பத்திரிக்கைக்கு கட்டுரையாக தேவைப்பட்டது . இத்தனைக்கும் அப்போது என்னிடத்தில் இருந்ததெல்லாம் ஒரு அன்பர் வாங்கி தந்த ஒற்றை காவி வேட்டி மட்டும்தான் . 

அவர் பேசிய உரையாடல்களில் ஒன்றில் கூட என் நிலை பற்றியோ அல்லது எனக்கு எவ்வித உதவி தேவைப்படுகிறது என்பதை பற்றியோ (இன்று வரை) ஒரு வார்த்தை கேட்கவில்லை. கட்டுரை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார்.

எப்படியும் நான் எழுதுவதை எடிட் செய்துதான் போடுவார்கள் என்பது நான் அறிவேன், ஆனால் எப்படி எழுதுவது . யாரிடம் சென்று பேப்பர் , பேனா போன்றவற்றை வாங்க காசு கேட்பது . ஏதோ ஒரு நினைவில் சரி முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டாலும் எத்தகைய வழியும் புலப்படாமலே நாள் கழிந்து கொண்டிருந்தது,

குப்தகாசியாக இருந்திருப்பின் யாரிடமாவது கம்யூட்டர் கேட்டிருப்பேன் .இங்கு அதற்கும் வழி இல்லாது இருந்தது, அடுத்து ஒவ்வொரு நாளும் உணவிற்கு எந்த ஆசிரமத்திற்கு செல்வது என்கிற நிலை மறுபுறம்.

சில ஆசிரமங்கள் எனக்கான ஆதரவை அளிக்க முன்வந்திருந்தாலும் அங்கு சென்று இத்தகைய பணிகள் எல்லாம் செய்ய முடியாது என்பதால் இறைவனே வழி காட்டட்டும் என அமைதியாய் இருந்தேன். அதே சமயம் எழுத்துக்கள் எனக்கு வடிகாலாய் இருக்கும் என்று நினைத்தேன், என் கட்டுப்பாட்டில் இல்லாத அரசியல் களத்தில் இருந்து என் கவனத்தை திருப்ப உதவி புரியும் என்று எண்ணினேன்.

அடுத்த வேளை உணவு அல்லது எதிர்காலம் பற்றி பயம் , நாளை பற்றி கனவுகள் என்னை ஆக்ரமிக்காமல் இருக்க எழுத்தில் முழ்குவது உதவும் என்று எண்ணினேன். அதனால் ஆர்வம் கொண்டேன். எனக்கும் உயிர் வாழ ஏதோ ஒரு பிடிப்பு தேவை பட்டது. நாளை காலை கண்விழிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் பிடிப்பாக உணர்ந்த தருணங்கள் அவை.

நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே என் நம்பிக்கையின் ஆதாரமாக செயல்பட்ட தருணம். ஆனால் செயலுக்கு இவை போதாதே. அந்த நேரத்தில்தான் என்னை கேதாரத்தில் கண்டு சென்றிருந்த டெல்லி அன்பர் உதவ முன்வந்தார்.

இடம் பெயர்ந்தேன் . அங்கு சில தினங்கள் இருந்து அவர்கள் கேட்ட படி சுருக்கமாக சொல்ல முயற்சித்து , திருப்தி பெறாவிட்டாலும் நேரமின்மை காரணமாக ஒருவழியாய் கட்டுரையை ஞான ஆலயத்திற்கு அனுப்ப தயாராகி இருந்தேன் . அப்போதுதான் தினமணியின் ஆர்விஎஸ் தொடர்ப்பு கொண்டார்.

ஏற்கனவே எனது எழுத்துக்களை பேஸ்புக் மூலம் படித்திருந்ததால் நல்ல ஊக்கமளித்தார். ஏற்கனவே மஞ்சுளா ரமேஷ் வேண்டுகோளுக்கு பணி செய்த போதும் எனக்கு திருப்தி அளிக்க வில்லை என்று கூறினேன், என்னால் சிறு கட்டுரையாக எழுத முடியாது அண்ணா என்கிற போது , கவலைப்படாதீர்கள் தாரளமாக தங்களது போக்கில் எழுதுங்கள் நமது வெப்பத்திரிக்கையில் தொடராக வெளியிட ஏற்பாடு செய்கிறேன் என்று ஆசிர்வதித்தார்,

மேற்கொண்டு  அந்த அன்பருக்கு தொந்தரவாய் இருக்க விரும்பாததால் டெல்லியில் தங்க முடியாத நிலை. தங்கியிருந்த ஆசிரமத்திலோ உணவுக் கூடம் எங்கு உள்ளது , எத்தனை மணிக்கு என்பதையே 2, 3 தினங்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலை. 

அவர் அறிமுகப் படுத்திய நபரோ தனது கம்யூட்டரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததே பெரிதாக இருந்தது, ஆனால் அவர்கள் இருவரிடத்திலும் சரி அல்லது வேறு எவரிடத்திலும் சரி என் பசியை பற்றி பேசவில்லை. பட்டினியால் நாட்களை கழிக்க முடியாது என்பது கட்டுரையை முடித்த போது மூளைக்கு உறைத்தது. நன்றாக சாப்பிட்டு வாழ்பவனைப் போலவே நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஹரித்துவாருக்கு திரும்ப எத்தனித்தேன். குறைந்த பட்சம் சாப்பாடும் தங்குமிடமுமாவது உத்திரவாதம் என்பதுதான் ஒரே காரணம்.

ஆனால் வாழ்க்கை அதற்கே உரிய அம்சத்தோடு விரிய ஆரம்பித்தது, அடுத்த விநாடி சுமந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்களை அளவிட முடியாது என்கிற சினிமா வசனம் அழகானதுதான்,  20 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ப்பில் வந்த எனது நண்பரும் பள்ளித் தோழனும் உறவும் ஆகிய ஒருவர் அந்த ஷணத்தில் அடுத்த படிகட்டாய் உதவ முன்வந்தார்.

ஞான ஆலயத்தில் ஜுலை மற்றும ஆகஸ்ட் இதழ்களில் வெளிவந்தது கட்டுரை, ஜுலை மாத கட்டுரையை பிடிஎப் பைலாக அனுப்பி வைத்தவர்கள் ஏனோ அதன் பின் ஆர்வம் காட்டவில்லை, இந்த புத்தகத்தை படித்து என்னோடு தொடர்ப்பு கொண்ட முன்பின் அறியாத அந்த சிவனடியார்கள் பெற்ற இன்பம் எனக்கு கொடுத்து வைக்க வில்லை,

பலமுறை மஞ்சுளா ரமேஷிற்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பியும் , அவரது மொபைலுக்கு பேசியும் கூட இன்று வரை பதில் வரவே இல்லை. இதற்குள் சில அன்பர்கள் பத்திரிக்கையில் எழுதியதற்கு என்ன சன்மானம் பெற்றீர்கள் என்கிற விசாரிப்பு வேறு

நான் செலவு செய்யாவிடினும் அந்த டெல்லி அன்பர் எனக்காக செய்த செலவு(ஆசிரமத்திற்கு அளித்த நன்கொடை) கூட நான் பெறவில்லை என்பதுதான் உண்மை. அப்படி எதையும் எதிர்பார்த்தும் நான் அதை எழுதவில்லை .

என்ன குறைந்த பட்சம் இரண்டாவது பாகத்தையும் ஒரு பிடிஎப் பைலாக அனுப்பி வைத்திருந்தால் அதை படித்து இப்படித்தான் வந்திருக்கிறது என்கிற  சந்தோஷமாவது பெற்றிருப்பேன், அவ்வளவுதான். ஆனால் அதற்கு எனக்கு கொடுப்பினை இருக்கவில்லை. 

அவரைப் போன்ற ஆன்மீக பத்திரிக்கை நடத்துபவர்கள் தங்களது வாசகர்களோடு இணைந்து  ஒரு சிறிய ஆசிரமம் அமைத்து தர முன்வருவார்கள் என்று எண்ணம் கூட இருந்தது உண்மை. அதை இங்குள்ள சாதுக்களுக்கு பயன்படும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்றெல்லாம் கூட மனம் கற்பனை செய்தது. 

ஆயினும் அவர்களுக்கு ஒரு வகையில் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு திசை காட்டியது போல அமைந்தது அவர்களது விண்ணப்பம், அதே போல் இந்த கற்பனைகள் என்னை எனக்குள் ரசிக்க வைத்தன. வாழ்க்கையின் திசை அறியாத காலத்திலும் கனவுகள் வழிநடத்தின என்றால் அது மிகையாகாது.

அதற்கு மாறாக தினமணியில் இருந்து ஆர்விஎஸ்ம் ஸ்ரீராமும் (சன்மானம் எதுவும தராவிட்டாலும் J – இங்கும் நான் அப்படி எதையும் எதிர்பார்க்கவில்லை ) தங்களது அன்பையும் ஊக்குவிப்பையும் இன்றுவரை தொடர்ந்து தந்து வருவது எத்தனையோ மனிதர்கள் இழந்து நின்ற இத்தருணங்களில் அற்புதமான இருமனிதர்களை வரமாக பெற்றது போல உணர்வு. (மஞ்சுளா ரமேஷ் உள்பட இத்தகைய அழகான மனிதர்களே அவர்களது தொடர்ப்புகளே எனது வாழ்க்கைக்கு சன்மானம்தான்))

முதல் எழுத்து தினமணி தரத்தில் அதுவும் எடிட் செய்யப்படாது அவர்களது ஆசியோடு வந்தது எனது தமிழாசிரியர்களுக்கும் , தங்களது எழுத்துக்ளின் மூலம் நடை சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் , என்னை எழுத ஊக்குவித்தவர்களுக்கும் அர்பணிப்பு

இப்படிபட்ட சூழுலில்தான் டிஸ்கவரி சேனலுக்கான அழைப்பு வந்தது. இதோ செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நடத்திய நேர்காணல் மற்ற இதர அம்சங்களோடு இணைத்து எடிட் செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் ஒலிபரப்பாகப் போகிறது, 

அது எப்படி இருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக ஒரு டிவியில் அதுவும் உலகெங்கும் ரிலிஸ் செய்யப்படும் ஒரு டாகுமென்டரியில் , ஆங்கிலத்தில்(எனது ஆங்கில புலமை பற்றி அல்ல) நான் பேசியுள்ளது என்பது நிச்சயம் என் வாழ்வில் ஒரு மைல் கல்தான். இந்த மைல் கல் உருவாக காரணமாக இருந்த என் வாழ்வில் பங்கு கொண்ட அனைத்து மனிதர்களுக்கும் இது அர்ப்பணம்தான்,

இத்தகவலை பேஸ்புக்கில் போட்டவுடன் பலரது வாழ்த்துக்கள் (போனிலும். தனி மெசேஜ்களிலும் என இன்று முழுவதும் நிரம்பி வழிந்தது) ஒரு சராசரி மனிதனாக,  வாழ்வதற்காக வாழ்ந்துள்ளது ,  அற்புதமான அனுபவமாக உள்ளது., 

வானத்தில் என்னை பெற்றவர்கள் அடையும் ஆனந்தத்தை ஆழ்மனம் உணருகிறது, ஒரு தாய்க்கு தன் மகன் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் சிறப்பாக செயல்புரிய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். எனது மழலை பேச்சுக்களிலேயே ஆனந்தம் கண்டவர்கள் டிவியில் அதுவும் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணும் போது பேரானந்தம் அடையமாட்டார்களா என்ன? 

இன்று எனது அடிப்படை தேவைகள் மீண்டும் பல அன்பர்களின் ஆசீர்வாதமாக உருவெடுத்து உடன் இருக்கிறது. இத்தனைக்கும் எவரிடமூம் எதுவும் யாசித்து நிற்கவில்லை. குருவின் கருணையும் ஆசிகளும் கங்கையைப் போல் பிரவாகமாக்கி நன்றியில் நனைக்கின்றது.

ஆனால் எனக்குள் ஆனந்தம் மட்டும் இல்லை. கனவுகள் மட்டூம் நிறைந்து உள்ளது. எனது உடன் பிறவா சகோதரிகளின் வாழ்க்கை , அவர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் எண்ணங்களை ஆக்ரமிக்கின்றன. தந்தையை இழந்து வாழ்க்கை பயணத்தில் அநாதைகள் என்று பெயர் சூட்டப்பட்டு , என் உலகில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வேதனைகளை மனம் எண்ணுகின்றது,

ஊட்டச்சத்து குறைபாடுகளினாலும் மலைவாழ் கலாசாரத்திலும் வாழும் இளம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் விழிப்பிணர்விற்கும் எத்தகைய செயல்களை செய்யலாம் என்று அவ்வப்போது சிந்தனை ஒடுகிறது. காணாமல் போன மனிதர்களின் சுவடுகளை தேடிக் கொண்டே இருக்கிறேன். அது ஒன்றே நான் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது.

என்னோடு வாழ்ந்த மனிதர்களின் பிரதிநிதியாக உலகம் முழுவதும் சில தினங்களில் தெரியப் போகிறேன். அவர்களை பற்றிய பல நினைவுகள் என்னை உறக்கத்தில் ஆழ்த்தவில்லை. பேரும் அறியாது ஊரும் அறியாது முகமும் தெரியாது எண்ணற்ற மனிதர்களின் நேசம், உயிர் வரமாய் என்னுள் வாழ்கிறது

நான் இல்லாது அவர்கள் அனைவரும் இருந்திருக்க முடியும் ஆனால் அவர்களும் நீங்களும் இல்லாது நான் இல்லை , வாழ்வின் இந்த தருணமும் இல்லை. இது கேதாரத்தில் என்னோடு வாழ்ந்தவர்களுக்கும் என் உத்திரகாண்டின் அன்பான மக்களுக்கும் , உங்களுக்கும் கூட பொருந்தும்

ஆயினும் அந்த காலவெள்ளத்தில் தங்களை கரைத்துக் கொண்டவர்களுக்கு இந்த நன்றிகளை அர்ப்பணிக்கின்றேன்

ஆலயத்தில் பரசுராமனின் நேசம் இனி கிடைக்காது
திவாரியின் திகட்டாத அன்பு தேடினாலும் எங்கும் பொழீயாது
குழந்தை நந்து இனி உணவு பரிமாறமாட்டான்
சந்திரகிரி சுவாமி ஆரத்திக்கு இனி வரமாட்டார்
அடைக்கலம் அளிக்க பாரத் சேவா ஆஸ்ரமம் இனி இல்லை
அந்த கடைசி இரவு பாடம் சொல்லிக் கொடுத்தவனை தேடுகிறேன்
புலித்தோலோடு சுற்றிய சிவனும் கண்ணுக்குள் வாழ்கிறான்
ஆயினும் இந்த குழந்தைகளின் அன்பில் அவர்களை காண்கிறேன்
அவர்களோடு நானும் என்னுள் வாழ்கிறேன் என் உடல் பிரியும் வரை


No comments:

Post a Comment