Wednesday 4 September 2013

வெற்றிடமாய் என்னுள் நிரம்புகிறேன் வெற்றிடத்தில் என்னை நிரப்புகிறேன்


வெற்றிடமாய் என்னுள் நிரம்புகிறேன்
வெற்றிடத்தில் என்னை நிரப்புகிறேன்

மரணத்திற்கான பயமும்
வாழ்க்கைகான காரணமும்
சேர்ந்தே வருகின்றன

அடுத்து என்ன என்பது எப்போதும்
ஒரு ஆச்சரியக்குறியாகவே உள்ளது


ஆனால் அந்த ஒற்றை கொம்பிலும்
அதன் கீழ் உள்ள புள்ளியிலும் ” நான்”
எதை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம்
பின் அதை கவிழ்த்து வெறுமை படுத்த
முயற்சித்துக் கொண்டிருக்கலாம்

எப்படியோ எதையோ ஒன்றை ஒயாமல்
செய்திட எனக்கு வாய்ப்புள்ளது
என்கிற செய்தியே என்னை எப்போதும் போல்
ஏராளமான ஆனந்தத்தில் மிதக்கச் செய்கிறது

ஆனந்தம் அதிகமாகும் போதெல்லாம்
போதையேறியவனைப் போல உள்ளுக்குள் தள்ளாடுகிறேன்
தெளிவாய் உளறுவதாய் பாராட்டுக்கள்
பைத்தியக்காரர்களிடம் இருந்து – மன்னியுங்கள்
ஏதோ சிலசமயம் எளிமையாகவும்
தெளிவாகவும் இருப்பவர்களிடம் இருந்து

என்ன சொல்வது என்று தெரியாமல்
எல்லாவற்றையும் கடந்து போகிறேன்
என்னையும் கடந்து போகிறேனாம் !
யாரோ சொல்கிறார்கள்

என்ன விந்தை இது ?
என்னை எப்படி என்னால் கடக்க முடியும் ?
நான் இருக்கும் வரை
நானும் இருக்கிறேன் நானாய் இருக்கிறேன்
அப்படியிருக்க நான் எப்படி என்னை கடக்க இயலும் ?

ஒருவேளை நீங்கள் என் நிழல்களை
நான் என்று நம்பியிருக்கலாம் அது நிஜமல்ல
என் நிழல்கள் என் முழுமையை பிரதிபலிப்பதில்லை
அவை குறை நிறைகளோடே தெரிகின்றன
அவை பாவம்
எத்தவறும் செய்யாதபோதும் எனக்காக மிதிபடுகின்றன
நானே குறைநிறைகளற்றவன்
குறைகளாகவும் நிறைகளாகவும் பிரதிபலிப்பவன்
ஷணத்திற்கேற்ப குணங்களை மாற்றிக்கொள்பவன்


அட! பச்சோந்தியே – காதில் விழுந்தது
எனை திட்டுவதாய் நினைத்து அதையேன் பழிக்கின்றீர்
பச்சோந்தியின் அழகும் திறனும் இயற்கையை கேட்டுப்பாரும்
பல ஜென்மங்கள் எடுத்தாலும் உம்மால் அடைய முடியாதது
அதனால்தான் சொல்கிறேன்
நான் ஆடைகளை களைந்து நானாய் இருக்கிறேன்

அட! மறுபடியும் போராடாதீர்கள்
நான் ஆடைகளை களைந்து இருக்கிறேன் என்றுதான் சொன்னேன்
நிர்வாணமாய் இருப்பதாய் சொல்லவில்லை
நிர்வாணம் இன்னும் வெகுதூரம் என்பது எனக்கும் தெரியும்

ஆடைகளை களைந்தால் நிர்வாணம் என்று எவர் சொன்னது
குருவே என் நிழற்குடையாய் அவன் அருளே என் ஆடைகளாய்
அவன் குடைக்குள் என் ஆடைகள் அசிங்கம்
அதனால் அங்கு நான் மட்டுமே நானாய் இருக்கிறேன்

அவனோடு 


No comments:

Post a Comment