Tuesday 10 June 2014

வார்த்தைகள் அதன் பிரயோகங்கள்

வார்த்தைகள் வெற்று வார்த்தைகள்தான் சப்தங்கள்தான். ஆனால் உணர்வுகள் கலந்து வெளிவரும் போது அதன் தொனி வெவ்வேறு அர்த்தத்தை கேட்பவருக்கு புரிய வைக்கிறது.

மேலும் அதில் கெட்ட வார்த்தைகள் அல்லது நல்ல வார்த்தைகள் என்றெல்லாம் எதுவுமில்லை, அதை நாம்தான் நமது சமுக மற்றும் தனி மனித கோட்பாடுகளால் கெட்டது நல்லது என்று பகுத்து விடுகிறோம், நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை. ஆனால் கோபத்தாலும் , இயலாமையினாலும் பிறரை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களை சிறுமைபடுத்திக் கொள்ளும் அழகான மனிதர்களின் மத்தியில் வாழ்ந்து இருக்கிறேன்.

கவனிக்கவும். அழகான மனிதர்கள் என்று குறிப்பிடுகிறேன். ஆம் அவர்கள் அழகானவர்கள்தான் . ஆனால் இயற்கையை. இயல்பான விஷயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள். அதனாலேயே அவர்களுக்கு அதீத தீவிரம் தேவைப்படுகிறது. அதை அவர்களது கோபத்திற்கான காரணம் . வெறுப்பிற்கான மனிதர் தந்து விடுகிறார். 

ஆண் பெண் உறவு என்பதே உடல் சார்ந்தே எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் நம்மில் பெரும்பாலனவர்களால் உடல் தாண்டி எதையும் சிந்தனை செய்ய முடிவதில்லை. 

ஆனால் உடல் குறித்து கவனமில்லை என்று பசப்புகிறோம். ஒழுக்கத்திற்கு வரையரை படுத்திவிடுகிறோம். அந்த வரையரைக்குள் வராததை அல்லது அதற்கு அப்பாற்பட்டதை எல்லாம் ஒழுக்கமில்லாததாக , தவறானதாக , குற்றமானதாக கருதுகிறோம்,

அடித்தள மக்களிடையே இப்படி போராட்டம் இருப்பதில்லை. அடிக்கடி பிரயோகம் அல்லது அதை வெளிப்படுத்த தயக்கமின்மை , அவர்களுக்கு கூச்சத்தை போக்கிவிடுகிறது. குற்ற உணர்வை முற்றிலுமாக நீக்கி விடுகிறது,

அதே போன்று மேல்தள மக்களிடையே இதே விஷயங்கள் இயல்பாகவும் நாகரீகமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது (குறைந்த பட்சம் அந்தரங்கம் என்கிற போர்வைக்குள் சென்றுவிடுகிறது) ஆனால் அவர்களுக்கும் கூட தங்களது குற்ற உணர்வை கடந்து செல்ல வேறு பல வஸ்துக்கள் தேவைப்படுகின்றன. இதர பெரும்பாலானவர்கள் போராடுவதை அறியாமலே போராடுகிறார்கள். பேசக் கூட தயங்குகிறார்கள். 

இன்னமும் கொஞ்சம் ஆழமாக பாருங்கள். இப்படி கெட்ட வார்த்தைகளை பேசுவதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் நம்மை நாமே அவமானப் படுத்திக் கொள்கிறோம், 

உண்மையில் கெட்ட வார்த்தைகள் என்று எவர் அடையாளப் படுத்தினர். நமது கோபத்திற்கும் இயலாமைக்கும் வடிகாலாக போகும் இந்த உச்சரிப்புக்கள் உண்மையில் வெற்று வார்த்தைகள்தான். இப்படி பல சொற்களை நாம் பயன்படுத்தவே தயங்கும் நிலையில் வாழ்கிறோம். 

உதாரணமாக கழிப்பறை என்கிற சொல்லை பயன்படுத்த பலரிடம் தயக்கம் இருக்கும். இங்கிலாந்தில் லெக் என்கிற சொல்லை பயன்படுத்தவே தயக்கம் இருக்குமாம். லெக் என்று சொன்னாலே அதுவே ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்வார்களாம். இப்படி ஒருவர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.

எனக்கும் கூட இவ்வகை தயக்கங்கள் இருந்திருக்கின்றன. சிறுவயதில் யார் வீட்டிற்காவது செல்ல நேரிட்டால் கழிப்பறை எங்கிருக்கிறது என்று கேட்க பலமணி நேரம் போராட்டம் இருக்கும். இன்றும் நமது சமுகத்தில் மாதவிடாய் என்கிற சொல்லை சொல்வதே , அல்லது அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பேசினாலே ,  ஏதோ பாவம் செய்தவனை போன்ற பார்க்கிற பாவனையை சமுகம் பெற்றுள்ளது. அது இயல்பான ஒரு அம்சம் , வாழ்வின் அடிப்படையான அம்சம் என்று எளிமையாக பேசமுடிவதில்லை.

இதையெல்லாம் பேசலாமோ என்கிற எண்ணத்துடனேயே பேச வைக்கிறது. அல்லது இதை மட்டுமல்ல இதை கடந்து எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று போலித்தனமான சிந்தனையை தந்து விடுகிறது. வார்த்தைகளின் வலிமையை வரையறையை உணர விழிப்புணர்வை பெற வேண்டியுள்ளது, 

ஆனாலும் தற்போதெல்லாம் சினிமாக்களிலும் சரி அல்லது பேஸ்புக் போன்று சமுக தளங்களிலும் இப்படி பயன்படுத்த நேரிடும் போது வேறு குறியீடுகளையும் இல்லது இடைவெளிகளாலும் நிரப்புகிறார்கள். இதனாலேயே அவ்வார்த்தைகளுக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தர ஆரம்பித்து விடுகிறோம். 

கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று எழுதினாலே போதுமானது. இல்லையா? புரிந்து கொள்ள முடிந்தவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தங்களை திருத்திக் கொள்வார்கள் கூட. கற்றுக் கொள்ள ஆர்வமில்லாதவர்கள் அதே கெட்ட வார்த்தைகளினால் திட்டினால் கூட புரிந்து கொள்ள மாட்டார்கள்.  

இத்தகைய இடைவெளிகளாலும் அல்லது மற்ற குறியீடுகளாலும் நிரப்புவதை விட, உண்மையில் அப்படியே பயன்படுத்தினால் கூட அது அவ்வளவு முக்கியத்துவத்தை பெறாது. அதைவிட சிறந்த உபாயம் இத்தகைய வார்த்தைகளை நம்முள் வடிவம் பெற அனுமதிப்பதைக் காட்டிலும் , மாற்று வார்த்தைகளை உருவாக்கிக் கொள்வது சாலச் சிறந்த ஒன்று.

எனெனில் ஏற்கனவே நமது எண்ணத்திலும் உணர்விலும் , நமக்குள்  வடிவம் பெற்று விட்ட கோபமோ அல்லது வெறுப்போ அல்லது வேறு ஒரு உணர்வோதான் , நமது வார்த்தைகளாகவும் வடிவம் பெறுகின்றது, மேலும் ஒன்று வார்த்தைகளாக வெளிப்படும் போது படிப்பவருக்குள்ளும் அது இயல்பாகவே வடிவம் பெற்றுவிடும். இது எளிமையான விஞ்ஞானம். அதுவும் இப்படி வேறு குறியீடுகளாலும் இடைவெளிகளாலும் நிரப்பப் படும் போது அது படிப்பவரின் கவனத்தை பெற தவறுவதே இல்லை.

இது நமக்குள் ஏதோ செய்யக் கூடாததை செய்த மாதிரிசொல்லக் கூடாததை சொன்ன மாதிரி ஒரு  குற்ற உணர்வையும் உணர்வை உருவாக்கு மனவருத்ததில் ஆழ்த்துகிறது, உண்மையில் அந்த பிரயோகித்த அந்த வார்த்தையால் பாதிப்படைந்தவரை காட்டிலும் நம்மை அதிகம் பாதிப்படைய வைக்கிறது.

படிப்பவருக்கு வார்த்தை என்ன தெரியாமலோ அல்லது புரியாமலோ போய்விடுமான என்ன ? எதற்கு இப்படி ஒரு சில வார்த்தைகளுடன் போராட்டம்.  இப்படி நமக்குள்ளேயே சில செயல்களை , சில விஷயங்களை அசிங்கமென்றும் தவறென்றும் வரைபடுத்தி இயற்கையின் இயல்பான விஷயங்களோடு போராடுகிறோம். இது மிக ஆழமான போராட்டம்.

இது பிறரோடு நடக்கும் போது கவனிக்க முடிகிறது, ஆனால் நமக்குள்ளேயே மிக ஆழமாக நடப்பதை உணர முடியாமல் போய்விடுகிறது, இயற்கையில் இருக்கும் இயற்கையான விஷயங்களோடும் இயல்புகளோடும் இனம் புரியாது போராடுகிறோம்.

நமக்குள்ளேயே நல்லது கெட்டது என்று பகுத்து வைத்து போராடுகிறோம். இது அடுத்தவரிடம் எதிர்கொள்ளும் போராட்டமோ அல்லது அடுத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறும் நொடிகளோ அல்ல. நம்முடனே நாம் போராடுகிறோம். அதற்கு நாமே விளக்கங்கள் கூறிக் கொள்கிறோம். நியாயப்படுத்திக் கொள்கிறோம்,

காரணங்கள் உண்மையானவைதான். ஏற்றுக் கொள்ள கூடியவைதான். ஆனால் அக்காரணங்கள் நமக்கு விடை பெற்றுத் தருவதில்லை. கோபங்கள் தீர்வாகிவிடுவதில்லை , இயலாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது, மாறாக மேலும் வன்மம் கொள்ளச் செய்கிறது, எதிர்வினை ஆற்றச் செய்கிறது,

இதை மிகச் சிலரே விழிப்புணர்வுடன் எதிர்கொள்கிறார்கள், எனக்கு தெரிந்த எனது அற்புதமான நண்பர் ஒருவர் தனக்கு கோபம் வரும் போதும் , வெறுப்பு வரும் போதும் அடுத்தவரை மூநா என்று கூறிவிடுவார். மூநா என்பது முட்டாளே என்பதன் சுருக்கம். அடுத்தவரை தாங்கள் எப்படி முட்டாள் என்று சொல்ல முடியும் என்று கேட்டதற்கு அழகான விளக்கம் தந்தார்.

அடுத்தவருக்கு தனது கோபமும் வருத்தமும் புரிந்துவிடும். அதே சமயம் முட்டாளே என்று நானே என்னை அழைத்துக் கொள்வது போல எனக்கு தோன்றும். என்னை வளர்த்துக் கொள்ளாமல் , என்னை கோபம் கொள்ளமால் இருக்க வைக்க முடியாமல் , என்னை நான் அமைதியாக வைத்திருக்க முடியாத நான் அல்லவா முதலில் முட்டாள். 

அதே போல் எனது கோபத்தாலும் அதிகாரத்தாலும் வெறுப்பினாலும் பிறரை மாற்றிவிட முடியும் என்று நினைக்கும் நான் அல்லவா முதல் முட்டாள். 

இதன் மூலம் எப்போதெல்லாம் நான் இந்த எல்லையை உணர்கிறேனோ அப்போதெல்லாம் என்னை இன்னமும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இந்த வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன் என்று கூறினார், அல்லது எப்போதெல்லாம் நான் இந்த வார்த்தையை பயன்படுத்தினேனோ அந்த ஷணங்களை , நிகழ்வை மீண்டும் சீர் தூக்கி பார்த்து என்னை திருத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறேன் என்றார்,

அது முதல் நானும் அவரைப் போலவே அந்த வார்த்தையை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். அதன் பின் எல்லாம் அவரைப் போலவே எனது வாழ்க்கையிலும் தேவைப்படும் இடங்களில் பிறரை குறிப்பிட  இந்த மூநா அதிகமான இடத்தை பிடித்துக் கொண்டது. 

கடந்த சில வருடங்களாக இவ்வார்த்தையின்பயன்பாடும் மிக மிக குறைந்து விட்டதை எனக்குள் கவனிக்க முடிகிறது, ஏதோ ஒரு சில ஷணங்களைத் தவிர பெரும்பாலும் இல்லாமலே போய்விட்டது என்று கூட சொல்ல முடியும்  அது கூட கோபத்தினாலோ அல்லது வெறுப்பினாலோ பிரயோகிக்க தேவையின்றி, அல்லது என் இயலாமையின் வெளிப்பாடாக இன்றி அமைந்திருப்பது வரப்பிரசாதமே.

ஆனால் வேறுவிதமான தொனியில் இதே வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தேன். இதே மூநா இப்பொதெல்லாம் என்னைச் சுற்றியுள்ள அன்பான மனிதர்களின் அறியாமையை முட்டாள்தனத்தை சுட்டிக் காட்ட மட்டுமே பயன்படுத்துகிறது., அவர்களின் மேல் எனக்கிருக்கும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவிதமாகவே மலர்ந்து பரிமளிக்கிறது, என்ன அழகான மாற்றம் , எனக்குள் மலர்கிறது,

அந்த வார்த்தையை பரிசளித்த எனது நண்பருக்கு நன்றி, 

ஆனால் அதற்கு முன்னால் நான் பயன்படுத்தி வந்த எனது வார்த்தை வேறு , அது என்ன தெரியுமா? புண்ணாக்கு J அது கூட மனிதர்களை குறிப்பிட நான் பயன்படுத்தியதில்லை

ஆனால் ஆங்கிலத்தில் நான்சென்ஸ் என்று சொல்லவோ அல்லது தமிழில் குப்பை என்று சொல்லுவதை விட புண்ணாக்கு என்று சொல்வது சரியாக இருந்ததாக எனக்கு உணர்வு

அதற்கு காரணம் அந்த குப்பையில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கவும் உரம் தயாரிக்கவும் சிலர் கற்றுக் கொண்டு விட்டதை அறிந்து கொண்டதால்தான்

இப்போதெல்லாம் இந்த "புண்ணாக்கும்" எனக்கு உணவாவதில்லை. அது மாடுகளுக்கு சென்று விட்டது. அவைகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. நானும் ஆனந்தமாக இருக்கிறேன்


(பேஸ்புக்கில் ஹன்ஸாவின் பதிவை படித்த போது தோன்றிய வார்த்தைகள்)

No comments:

Post a Comment